Saturday 23 April 2016

இணையத்தில் ஒளிந்து கொள்ள முடியுமா?


நாம் எதிர்பார்க்காமல், நம் மொபைல் போனுக்கு மற்றும் மின் அஞ்சல் முகவரிக்குப் பல நிறுவனங்கள் தங்களைப் பற்றிய தகவல்களை அனுப்புகின்றன. நாம் எந்தச் சூழ்நிலையிலும், இணையத்தில் சென்று பார்க்காத நிறுவனங்களிடமிருந்து தொடர்ந்து பல தகவல்கள் பாப் ஆகிக் கிடைக்கின்றன. இது எப்படி சாத்தியமாகிறது? நாம் நம் விருப்பத் தேடலின் போது, சில இணைய தளங்கள், நம்முடைய மின் அஞ்சல் முகவரியினைக் கேட்கும். கூடவே, நம் மொபைல் போன் எண்ணையும் கேட்டுப் பெறும். இவ்வாறு பெறப்படும் தகவல்கள், மற்ற நிறுவனங்களுக்கும் செல்கின்றன. “நீங்கள் அளிக்கும் தகவல்கள் மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட மாட்டாது” என்ற செய்தியுடன் செயல்படும் பல இணைய தளங்கள், அவற்றுடன் தொடர்பு கொண்டுள்ள இணைய தளங்களிடம் அவர்கள் அறியாமலேயே தங்களிடம் உள்ள தகவல்களைத் தந்து விடுகின்றன. இதுவே, பலமான பரவலுக்கு இலக்காகி, நாம் தொடர்ந்து நமக்குத் தேவையில்லாத தகவல்களைப் பெறும் நிலைக்கு ஆளாகும் சூழ்நிலையை உருவாக்குகின்றன. 

இதிலிருந்து எப்படி தப்பிக்கலாம்? அப்போதைக்கு மட்டும் ஏதேனும் ஒரு மின் அஞ்சல் முகவரியைத் தற்காலிகமாகப் பயன்படுத்தலாமா? அதே போல ஏதேனும் ஓர் எண்ணை, தொலைபேசி எண்ணாகத் தரலாமா? இது கூட நல்ல யோசனைதான். ஆனால், நமக்கு அந்த தற்காலிக முகவரியும், எண்ணும் எப்படி கிடைக்கும்? ஒருமுறை பயன்படுத்திவிட்டு, குப்பைத் தொட்டியில் வீசப்படும் “டிஸ்போஸபில் சிரிஞ்ச்” போல நமக்கு இந்த முகவரியும் எண்ணும் வேண்டுமே?

இவற்றை நமக்குத் தந்து உதவுவதற்கென்றே, சில இணைய தளங்கள் இயங்குகின்றன. இந்த தளங்களில் எந்தவிதமான பதிவும் இல்லாமல், எந்த எண்ணையும் தராமல், அப்போது மட்டுமே பயன்படுத்திவிட்டு 'எறிந்துவிடக்கூடிய' மின் அஞ்சல் முகவரிகளும், தொலைபேசி எண்களும் கிடைக்கின்றன. இந்த தளங்களில், நான் பயன்படுத்த விரும்புவது, http://www.temp-mail.org என்ற இணையதளம் ஆகும். இந்த இணையதளத்திற்கு நீங்கள் சென்றவுடன், உங்களுக்கென ஓர் இமெயில் முகவரி உருவாக்கப்பட்டு வழங்கப்படும். இதனைக் கூட, நீங்கள் விரும்பினால் மாற்றிக் கொள்ளலாம்.


இந்த மின் அஞ்சல் முகவரியினை, உங்களிடம் முகவரி கேட்கும், நீங்கள் அதன் பார்வையிலிருந்து ஒளிந்து கொள்ள விரும்பும் தளங்களில், பயன்படுத்தலாம். அந்த தளங்கள், உங்களுக்குத் தரப்படும் விளம்பர மின் அஞ்சல்கள் அனைத்தும் அந்த முகவரிக்கு அனுப்பப்படும். நீங்கள் விரும்பினால், இந்த இணைய தளம் சென்று, உங்களுக்கான அஞ்சல்களைக் காணலாம். இந்த தற்காலிக மின் அஞ்சல் முகவரியை நீங்களாக, அழிக்காதவரை அது உங்களுக்கான ஒளியும் அஞ்சல் முகவரியாக இருக்கும். நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

அண்மைக் காலமாக, இணைய தளங்கள், உங்கள் சரியான அடையாளத்தை உறுதி செய்திட, இரட்டை முறை சோதனையை மேற்கொள்கின்றன. அந்த வகையில் உங்கள் மொபைல் எண்ணைக் கேட்கின்றன. வழக்கமாக நீங்கள் பயன்படுத்தும் மொபைல் எண்ணை நீங்கள் தர வேண்டியதுள்ளது. அப்படி தருகின்ற பட்சத்தில், பல தேவையற்ற இடங்களிடமிருந்து ஸ்பேம் செய்திகள் குவிகின்றன. இதனைத் தடுக்க, மேலே தற்காலிக மின் அஞ்சல் முகவரிகள் தருவது போல, தற்காலிக எண்களையும் நீங்கள் பெறலாம். இரு தளங்கள் இந்த வகையில் பயனுள்ளதாய் உள்ளன. இந்த தளங்களின் முகவரிகள் http://www.smsreceivefree.com / http://www.tempophone.comஇங்கு சென்றவுடன், உங்களுக்கென சில எண்கள் காட்டப்படும். 

அவற்றிலிருந்து இரண்டினை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். உங்களிடம், மொபைல் எண் கேட்கும் நிறுவனங்களின் இணைய தளத்தில் இந்த எண்களைத் தரலாம். இந்த எண்களுக்கு அனுப்பப்படும், எஸ்.எம்.எஸ். தகவல்கள், இந்த தளத்தில் கிடைக்கும். எனவே, தகவல்களை எதிர்பார்க்கையில், இந்த தளம் சென்று, அவற்றைப் பெறலாம். ஆனால், 30 நாட்களில், இந்த எண்களின் செயல்பாடு காலாவதியாகிவிடும். நீங்கள் மீண்டும் புதிய எண்களை இந்த தற்காலிக மொபைல் எண் தளத்தில் பெற்றுக் கொள்ளலாம். இந்த வகையில், இணைய வெளியில், உங்கள் உண்மையான அடையாளத்தைக் காட்டாமல், ஒளிந்து நின்று செயல்படலாம்.


No comments:

Post a Comment